Monday, October 10, 2016

68 அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா

இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...
சிலநாட்களுக்கு முன் அன்புடன் ,சகோதரி நல்லாருக்கீங்களா..கொஞ்சம் அலுவலகத்துக்கு வர்றீங்களா..என்று அழைத்த போது கூட இப்படி எதிர்பார்க்கவில்லை..அலுவலகம் நிறைந்த புத்தாடைகளைக்காட்டி உங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு தீபாவளிக்காக புதிய ஆடைகள் வழங்க நினைக்கின்றேன்...என்று எவ்ளோ வேணும்னு கேட்ட போது மலைத்தே போனேன்...ஒரு 50 குழந்தைக்கு கொடுக்க முடியுமா அண்ணா என்றேன்..எவ்ளோ வேணுமோ எடுத்துக்குங்கம்மா என்றார்..இன்று 68 குழந்தைகளுக்கு ரூ 50,000 மதிப்புள்ள ஆடைகளை மாணவிகளுக்கு மனம் நிறைய வழங்கி மகிழ்ந்தார்.
இவ்விழாவில் சிறப்புவிருந்தினராக கவிஞர் முத்துநிலவன் அண்ணாவும் கலந்து கொண்டதைக்காண கண் கோடி வேண்டும்..நன்றி அண்ணாஸ்..
புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் இன்று [6.10.16] மாலை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வண்ணஆடைகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் சங்கத்தின் மாநில உறுப்பினரான திருமிகு முத்துநிலவன் அவர்களும் திருமிகு ஏ.ஆர்.எம் அப்துல்லாஹ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் திருமிகு இரவி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையாசிரியர் திருமிகு கோ.அமுதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து தலைமையுரை ஆற்றினார்.
புதுக்கோட்டை ஐக்கியநல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு பஷீர் அலி அவர்கள்..மாணவர்களுக்கு சேவை செய்வதன் அவசியத்தைக்கூறி மேலும் பல உதவிகள் செய்ய காத்திருப்பதாகக் கூறிய பொழுது மாணவிகள் கரவொலியால் தங்களது மகிழ்வைத் தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமிகு ஏ.ஆர்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் தங்களது சகோதரிகள் இப்பள்ளியின் முன்னால் மாணவிகள் என்றும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாகக்கூறியது அனைவர் மனதையும் நெகிழ வைத்தது.
கவிஞர் முத்துநிலவன் அவர்கள். மாணவிகளுக்கு புதிய வண்ண ஆடைகளை வழங்கிய போது அவர்கள் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை. மேலும் அவர் தனது சிறப்புரையில் பாடம் படிப்பது மட்டும் கல்வியல்ல..அடிப்படையில் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ளும் அனைத்துமே அறிவாகும்...பெண்கள் எதற்கும் துணிவுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற வேண்டும்.சமூக சூழ்நிலை உங்கள் கல்விக்கு இடையூறு தந்தாலும் கல்வியில் முன்னேறி வெற்றி பெறுவதே வாழ்வின் இலட்சியமாகும் ..மதிப்பெண்கள் மட்டும் கல்வியில்லை...நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வதும் முக்கியமான ஒன்றாகும் என மாணவிகள் மகிழும் படி சிறப்பானதொரு உரையாற்றினார்.
தமிழாசிரியர் கிருஷ்ணவேணி அவர்கள் அனைவருக்கும் கவிதை நடையில் நன்றி பாராட்டி நன்றியுரை கூறினார்.
முதுகலைத்தமிழாசிரியர் திருமிகு பரமசிவம் அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
பள்ளிக்கு மேலும் பல உதவிகளை செய்து தருவதாகக்கூறி திருமிகு பஷீர் அலி அவர்கள் கூறிய போது இவர்களைப்போன்ற கொடையாளிகளால் அரசுப்பள்ளிகள் வளம் பெறுகின்றது என பள்ளியின் ஆசிரியர்கள் கூறி மகிழ்ந்தனர்.


No comments:

Post a Comment