Monday, September 19, 2016

பெரியார் பிறந்தநாளில் வண்ண ஆடைகள் வழங்கும் விழா
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவிகள் அனைவருக்கும் புதிய ஆயத்த ஆடைகள் புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மீனாட்சிசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன், கவிஞர் கீதா, புதுகை செல்வா, கவிஞர்.மீரா செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஐக்கிய நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். டி.சீர் அலி  66 மாணவிகளுக்கு ஆயத்த ஆடைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கும்போது முயற்சி உடையோருக்கே எல்லாம் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துக்காட்ட, நூறு ரூபாய் பணத்தைக்காட்டி இது யாருக்கு வேண்டும் என கேட்டார். மாணவர்கள் தயங்க, பின் அவர்களை ஊக்கமூட்டி உடனே முன்வந்த மாணவிக்கு சட்டென்று உனக்குதான் இந்த பணம் என்ன செய்ய போகிறாய் என்று பசீர் அலி அவர்கள் கேட்க இதை நான் உண்டியலில் சேர்த்து வைப்பேன் ன்று அந்த மாணவி கூறி வியப்பூட்டினார். நிறைவாக பள்ளியின் ஆசிரியர் பேச்சியம்மாள் நன்றியுரை வழங்கினார். ஐக்கிய நலக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் K நூருல்லாஹ், மொய்தீன், பள்ளி ஆசிரியர்கள் அன்புக்கிளி, சுபா, ராமதிலகம், நிர்மலா, பவுலின் ஜெயராணி பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.